Thursday, July 24, 2014

ஆடிமாத பிறப்பையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிமாத பிறப்பையொட்டி நேற்று சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோட்டை மாரியம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆடி மாத பிறப்பு

ஆடி மாதம் பிறந்தாலே சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடிப்பண்டிகை உற்சாக கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப் பெருக்கு உற்சவமும், அதன் பின்னர் கோட்டை மாரியம்மன்கோவில், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில், குகை மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் ஆடிப்பண்டிகை விழா கோலாகலமாக நடத்தப்படும்.

நேற்று ஆடி மாதப் பிறப்பை சேலம் கோட்டை மாரியம்மன்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கவசத்தில் கோட்டை மாரியம்மன்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு விசேஷ அபிசேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு விசேஷ அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு தரிசித்தனர். மேலும் ஏராளமான பெண் பக்தர்கள், வேண்டுதலுக்காக கோவிலில் உள்ள முகூர்த்தக்காலில் மஞ்சள் கயிறு மற்றும் வளையல்களை கட்டினார்கள்.

தங்கக்கவசத்தில் பலபட்டரை மாரியம்மன்

அதேபோல் சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மனுக்கும் நேற்று காலை விசேஷ அபிசேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. குகை பகுதியில் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவிலிலும் நேற்று காலை அம்மனுக்கு விசேஷ அபிசேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.

சேலம் அரிசிப்பாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு காலையில் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து பல வண்ண மலர்கள் மற்றும் எலுமிச்சை பழங்கள் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தன. அம்மாபேட்டை பட்டை கோவில் அருகே உள்ள சின்னமாரியம்மன் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பலபட்டரை மாரியம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதுபோல அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில், நெத்திமேடு காளியம்மன், லீபஜார் காளியம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

இதேபோல் மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்


No comments:

Post a Comment

Like Us